ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில் சந்தனக்கூடு விழா கொடியிறக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூன் 2024 08:06
கீழக்கரை; ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில் மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா கொடியிறக்கம் நேற்று மாலை நடந்தது.
ஏர்வாடியில் அல் குத்புல் சுல்தான் செய்யது இப்ராகீம் பாதுஷா நாயகம் தர்காவில் 850ம் ஆண்டு உரூஸ் என்னும் மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா நடந்தது. மே 9ல் மவுலிது (புகழ் மாலையுடன்) விழா துவங்கியது. மே 19ல் தர்கா வளாகம் முன்புறம் உள்ள கொடிபீடம் அமைந்துள்ள இடத்தில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. மே 31 மாலையில் சந்தனக்கூடு விழா துவங்கி மறுநாள் ஜூன் 1ல் அதிகாலையில் சந்தனக்கூடு ஊர்வலம் வந்தவுடன் பாதுஷா நாயகத்தின் புனித மக்பராவில் சந்தனம் பூசப்பட்டது. நேற்று மாலை 5:00 மணிக்கு தர்கா முன்புறமுள்ள கொடி பீடம் அமைந்துள்ள இடத்தில் 85 அடி உயரம் உள்ள கம்பத்தில் கொடி இறக்கம் செய்யப்பட்டது. மேள தாளங்கள் முழங்கியவுடன் தர்காவின் கொடி முறைப்படி மடிக்கப்பட்டு பாதுஷா நாயகத்தின் மூலஸ்தானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
கொடியிறக்கம் செய்யப்பட்டவுடன் சாக்லேட், கற்கண்டு, பேரிச்சம்பழம் உள்ளிட்ட இனிப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு பொதுமக்கள் மற்றும் யாத்ரீகர்களுக்கு பெரிய அண்டாக்களில் வைத்து தப்ரூக் எனப்படும் நெய் சோறு அன்னதானமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஏர்வாடி ஹக்தார் நிர்வாக சபையினர், உறுப்பினர்கள் செய்திருந்தனர். சந்தனக்கூடு விழா நிறைவாக கொடியிறக்கம் நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலம், தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.