திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூன் 2024 05:06
சிவகாசி; சிவகாசி அருகே திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோயில் ஆனி பிரம்மோற்ச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிவகாசி அருகே திருத்தங்கல் நின்ற நாராயணபெருமாள் கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று. புராதான சிறப்புமிக்க இக்கோயில் குடைவரை முறையில் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் ஆனி பிரம்மோற்சவ தேரோட்ட திருவிழா பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு ஆனி பிரம்மோற்சவ திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக செங்கமலதாயார் சமேத ஸ்ரீ நின்ற நாராயணப்பெருமாள் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் ஆராதனை நடந்தது. கருட கொடி பட்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அதன்பின் காலை 7:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. முத்து பட்டர் தலைமையில் வெங்கட்ராம பட்டர் கொடியேற்றினார். தொடர்ந்து 9 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் இரவு சேமம், கருடன், அன்னம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமிகள் எழுந்தருளி நான்கு ரத வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்கள். ஆனி பிரமோற்சவ விழாவில் ஜூன் 21 ல் இரவு கருட சேவையும், 23 ல் இரவு சயன சேவையும் நடைபெறுகிறது. ஜூன் 25 ல் காலை 8:05 மணிக்கு ஆனி பிரம்மோற்சவ தேரோட்டம் நடைபெறுகிறது.