பதிவு செய்த நாள்
18
ஜூன்
2024
11:06
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் மாதனம்பாளையத் தெருவில் மாணிக்க விநாயகர், காமாட்சியம்மன் உடனுறை மஹா ருத்ரேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் 27 ஆண்டுகளுக்குப் பின், அனைத்து சன்னிதிகளுக்கும் புதிதாக விமானம், புதியராஜகோபுரம், பிரகாரங்களில் கருங்கல் தரைதளம், புதிய உற்சவ விக்ரஹகம் என, பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 15ம் தேதி யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று, காலை 6:40 மணிக்கு மாணிக்க விநாயகர் கோவில் கோபுர விமான கலசத்திற்கும், காலை 10:00 மணிக்கு மஹா ருத்ரேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் மற்றும் மூலவர் விமானங்களுக்கும் வேத விற்பன்னர்கள் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். தொடர்ந்து மூலவருக்கு மஹா அபிஷேகமும், மஹா தீபாராதனையும், பிற்பகல் 12:00 மணிக்கு திருக்கல்யாண விருந்தும், மாலை 5:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுலாவும் நடந்தது. விழாவிற்கான ஏற்பாட்டை மாதனம்பாளையம் தெரு அன்பர்கள், இளைஞர்கள் மற்றும் சிவபக்தர்கள் இணைந்து செய்திருந்தனர். விழாவில் பங்கேற்ற மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக பரமாச்சாரியர் சுவாமிகள், பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.