பதிவு செய்த நாள்
18
ஜூன்
2024
11:06
மைசூரு என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது, சாமுண்டி மலையில் இருக்கும் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் தான். ஆனால் மைசூரில் சாமுண்டீஸ்வரி அம்மனின் தங்கையான ஜுவாலாமுகிக்கும் கோவில் உள்ளது.
மைசூரில் இருந்து, 12 கிலோ மீட்டர் துாரத்தில் அமைந்துள்ளது உத்தனஹல்லி கிராமம். இந்த கிராமத்தில் ஜுவாலமுகி திரிபுர சுந்தரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. சாமுண்டி மலைக்கு சென்று சாமுண்டியை தரிசித்து, அதன் பின்னர் அவரது தங்கையான ஜுவாலமுகி திரிபுர சுந்தரி அம்மனையும் தரிசித்தால் நல்லது நடக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். பீஜாசுரன் என்ற அரக்கன் உடலில் இருந்து வலியும், ஒவ்வொரு துளி ரத்தத்தில் இருந்தும் அசுரர்கள் தோன்றினர். அசுரர்களை பயன்படுத்தி தேவர்களையும், ரிஷிகளையும் யாகம் நடத்த விடாமல் தடுத்தான் பீஜாசுரன். இதனால் உலகத்தில் தாயான பார்வதியிடம் தேவர்களும், ரிஷிகளும் முறையிட்டனர். உக்கிர ரூபத்துடன் நாக்கை நீட்டியபடி கோரை பற்களுடன், ஜுவாலமுகி அவதாரத்தில், அசுரனுடன் போரிட்டு அவனது உடம்பிலிருந்து வெளிப்பட்ட ரத்தத்தை, ஜுவாலமுகி அம்மன் குடித்தார். பின்னர் அசுர வதம் செய்த பாவம் நீங்க, சிவனை வழிபட்டு பாவத்தை நீக்கினார்.
கோவிலில் நாக்கை நீட்டியபடி கோபத்தோடு காட்சி தரும், அம்மனின் கைகளில் திரிசூலம், உடுக்கை ரத்தம் குடிக்கும் பாத்திரம் உள்ளது. உற்சவ அம்மனின் முகம் சாந்தமான நிலையில் இருக்கிறது. வெள்ளிக்கிழமை ராகு காலத்தில், இந்தக் கோவிலில் தீபம் ஏற்றி வழிபட்டால், சர்ப்ப தோஷம், நாக தோஷம் விலகும். பவுர்ணமி அன்று எலுமிச்சை தீபம் ஏற்றினால் திருமண தடை நீங்கும். இந்த கோவிலுக்குள் விநாயகர், முருகர், காலபைரவர், நாகபைரவர் ஆகிய சுவாமிகளின் சன்னிதியும் உள்ளது. ஆடி பவுர்ணமி, நவராத்திரி, மகா சிவராத்திரி, சனி பிரதோஷம் இக்கோவிலில் விசேஷ நாட்கள் ஆகும். தினமும் காலை 7:30 மணி முதல் மதியம் 2:00 மணி வரையும், மாலை 3:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையும், கோவில் நடை திறந்திருக்கும்.
மேலும் விபரங்களுக்கு சதாசிவா என்பவரின் 97399 80255 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.