பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வருடாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூன் 2024 11:06
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து ஓராண்டு நிறைவைவையொட்டி வருடாபிஷேக விழா நடந்தது. பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தை சேர்ந்த கல்யாணசுந்தரவல்லி தாயார், சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் 2023 ஜூன் 28ல் கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது. தொடர்ந்து மண்டலாபிஷேக விழாவும், அதனைத் தொடர்ந்து நேற்று காலை வருடாபிஷேக பூர்த்தி வைபவம் நடந்தது. இதன்படி காலை 6:30 மணிக்கு அனுக்ஞை, விஸ்வக்சேன ஆராதனம் துவங்கி, கலச ஸ்தாபனம் செய்யப்பட்டது. பின்னர் மூல மந்திர ஜெப ஹோமங்கள் நடத்தப்பட்டன. இதனை தொடர்ந்து 10:00 மணிக்கு மகாபூர்ணாகுதி நடந்தது. அப்போது அர்ச்சகர்கள் தீர்த்த குடங்களை சுமந்து கடம் புறப்பாடு ஆகியது. தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி தாயார் சுந்தரராஜ பெருமாளுக்கு பல்வேறு வகை அபிஷேகங்கள் நடந்தன. மேலும் புனித தீர்த்த குடங்களிலிருந்து பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க பெருமாளை தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு கனகசபா மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.