சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் தேரோட்டம்; பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூன் 2024 10:06
காரைக்குடி; சாக்கோட்டையில் உள்ள சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சிவகங்கை சமஸ்தானம், தேவஸ்தானம் சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் ஆனித் திருவிழா கடந்த ஜூன் 17ஆம் தேதி கொடியேற்றம் காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. தினமும் காலை மற்றும் இரவு வேலைகளில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து தபசு காட்சியில் 63 நாயன்மார் வீதி உலாவும், திருக்கல்யாணமும் நடந்தது. நேற்று காலை வீரசேகர பிரியாவிடை உமையாம்பிகை தாயார், விநாயகர் தேருக்கு எழுந்தருளினர். தொடர்ந்து மாலையில் தேரோட்டம் தொடங்கியது. விநாயகர் தேர் முதலில் வர தொடர்ந்து வீரசேகர பிரியாவிடை தேரும், உமையாம்பிகை தேரும் நான்கு ரத வீதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில் சென்றது. இதில், சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.