பதிவு செய்த நாள்
26
ஜூன்
2024
10:06
சின்னாளபட்டி; சின்னாளபட்டி கோயில் விழாவில், இளைஞர்கள் மார்பில் கத்தி போட்டு வழிபாடு செய்தனர்.
சின்னாளபட்டி கீழக்கோட்டை ஸ்ரீ மது ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் விழாவில், மார்பில் கத்தி போட்டு வழிபாடு செய்வது வழக்கம். பெரிய கும்பிடு விழா, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. முகூர்த்தக்கால் ஊன்றுதல், கங்கணம் கட்டுதலை தொடர்ந்து, பால்குடம் ஊர்வலம். பாலாபிஷேகம் நடந்தது. முக்கிய நிகழ்வாக, ஜமீன்தார் முத்துராஜா தானமாக வழங்கிய குதிரையில் பிருந்தாவன தோப்பில் இருந்து அம்மன் அழைத்து வருதல் நேற்று நடந்தது. ராமலிங்க சவுடேஸ்வரி அம்மனை, கத்தியில் பூ சுற்றி, அதில் காதலை கருகமணி வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். பின்னர் கரக ஊர்வலம் நடந்தது. காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள், சவுடம்மா தீசுக்கோ என்ற கோஷத்துடன், மார்பில் கத்தி போட்டு வழிபாடு செய்தபடி அழைத்து வந்தனர். கோயிலில் சக்தி சேர்ப்பு நிகழ்ச்சியில், சிறுவர் முதல் முதியோர் வரை ஏராளமான பக்தர்கள், மார்பில் கத்திபோட்டு வழிபட்டனர். அம்மனுக்கு ராஜ அலங்காரத்துடன் சிறப்பு பூஜை, திருவிளக்கு வழிபாடு, அன்னதானம் நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர்.