ராமேஸ்வரம்; ராமேஸ்வரத்தில் வட மாநில பக்தர்கள் பங்கேற்ற ராமாயண சொற்பொழிவு நிறைவு விழாவில், ஏழை பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கினர்.
மகாராஷ்டிரா அக்கோலா சேர்ந்த பாகவத் சேவா சமிதி மற்றும் சிராவஹி பரிவார் சேகா அறக்கட்டளை சார்பில் கோபால் மகராஜ் ராமேஸ்வரத்தில் தனியார் மகாலில் ஜூன் 21 முதல் ஜூன் 26 வரை ராமாயண சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தினார். இதில் மகராஷ்டிரா, குஜராத், உ.பி., சேர்ந்த 200க்கு மேலான பக்தர்கள் பங்கேற்று அருளாசி பெற்றனர். இந்நிகழ்ச்சியின் நிறைவு நாளான இன்று வட மாநில பக்தர்கள் பகவத் கீதை புத்தகத்தை தலையில் சுமந்தபடி, மகாலில் இருந்து ராமேஸ்வரம் கோயில் வரை பஜனை பாடல்களை பாடியபடி ஊர்வலமாக சென்றனர். பின் மகாலில் ராமேஸ்வரம் சேர்ந்த ஏழை பெண்கள் மூவருக்கு, வட மாநில பக்தர்கள் குழு தையல் இயந்திரத்தை இலவசமாக வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை பா.ஜ., மாவட்ட பார்வையாளர் முரளிதரன் செய்திருந்தார்.