பதிவு செய்த நாள்
29
ஜூன்
2024
02:06
சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்த கோரி, ஸ்ரீ கோதண்டராமர் கோவிலில் தெய்வீக பக்தர்கள் பேரவையினர் மடியேந்தி பிரார்த்தனை செய்தனர்.
பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு பல ஆண்டுகளாக பிரம்மோற்சவம் நடைபெறாமல் உள்ளது. சில தினங்களுக்கு முன், தெய்வீக பக்தர்கள் பேரவையினர், கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்த வேண்டும் என சைவ, வைணவ பாகுபாடின்றி, அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, நேற்று காலை, பிரம்மோற்சவம் நடத்த, பொது தீட்சிதர்கள் ஒத்துழைக்க வேண்டும் என, மேலவீதயில் உள்ள ஸ்ரீ கோதண்டராமர் கோவிலில் சிறப்பு அர்ச்சனை செய்து, மடியேந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். மேலும், வெற்றிலை பாக்குடன் கோவில் நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பினர். நிகழ்ச்சிக்கு, தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவன தலைவர் ஜெமினி ராதா தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் வேல்முருகன் வரவேற்றார். மாநில துணைத் தலைவர்கள் சம்மந்தமூர்த்தி, ஆறுமுகம், மாநில பொதுச் செயலாளர் ரகோத்தமன் முன்னிலை வகித்தனர். சிறப்பு பூஜையை பத்ரி நாராயணன் பட்டாச்சாரியார் செய்தார். நிர்வாகிகள் பட்டாபிராமன், செல்வகுமார், விஜயகுமார், டிரைவர் முருகன், பரணி, பாலமுருகன் உட்பட பலர் பங்கேற்றனர். தெய்வீக பக்தர்கள் பேரவை மாநில பொதுச் செயலாளர் ராஜசேகர் நன்றி கூறினார்.