பதிவு செய்த நாள்
01
ஜூலை
2024
11:07
திருப்போரூர்; திருப்போரூர் அடுத்த மேட்டுத்தண்டலம் கிராமம், பிரதான சாலையில் தண்டுமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், நுழைவு வாயில் கோபுரம் கட்டி கும்பாபிஷேகம் நடத்த, கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி, கோவில் கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. தொடர்ந்து, மகா கணபதி ஹோமம், முதல் கால யாகசாலை பூஜை, நவக் கிரக ஹோமம் நடந்தது. கும்பாபிஷேக நாளான நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, யாகசாலை பூஜை, கோ பூஜை மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, கலச புறப்பாடு நடந்தது. பின், காலை 7:00 மணி அளவில், கோபுர விமான கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது, அங்கு திரண்டிருந்த பக்தர்கள் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை, கிராம மக்கள் செய்திருந்தனர்.