பதிவு செய்த நாள்
01
ஜூலை
2024
11:07
சின்னமனூர்; சின்னமனூர் மாணிக்கவாசகர் கோயிலில் 12 நாட்கள் நடைபெறும் ஆனித் திருமஞ்சன விழா இன்று காலை முகூர்த்த கால் ஊன்றி, சுவாமிகளுக்கு காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
தமிழகத்தில் மாணிக்கவாசகருக்கென தனி கோயில் சின்னமனூரில் மட்டுமே உள்ளது. சின்னமனூரிலிருந்து மார்க்கையன்கோட்டை செல்லும் ரோட்டில் உள்ள பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் 12 நாட்களுக்கு நடைபெறும் ஆனித் திருமஞ்சன விழா நிகழ்ச்சிகள் நேற்று காலை துவங்கியது. ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் 12 நாட்கள் திருமஞ்சன திருவிழா நடைபெறும். இந்தாண்டு இன்று காலை 7.45 மணிக்கு முகூர்த்த கால் ஊன்றி, சுவாமிகளுக்கு காப்பு கட்டுதலுடன் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து திரளான சிவனடியார்கள் பங்கு பெற்ற திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழா நடைபெறும் 12 நாட்களும் மாலை மூலவர் மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். மாணிக்கவாசகர் இத்திருத்தலத்தில் மூன்று மூலவர்களாக இருப்பது தனிச்சிறப்பாகும். மேலும் தெற்கு நோக்கி நின்ற நிலையில் இருக்கும் ஒற்றை சனீஸ்வரபகவான் பக்தர்களின் வேண்டுதலை உடனே நிறைவேற்றுவார் என்கின்றனர். வரும் ஜூலை 10 ல் மாணிக்கவாசகர் குரு பூஜை மற்றும் அன்னதானம், அன்று மாணிக்கவாசகர் சுவாமிகள் வீதி உலா நடைபெறும். தொடர்ந்து ஜூலை 12 ல் ஆனி உத்திரத்தன்று, நடராசர் சுவாமிகளுக்கு ஆனித் திருமஞ்சனம், மாலை சுவாமி வீதி உலா நடைபெறும். இன்று காலை நடைபெற்ற முகூர்த்த கால் ஊன்றுதல் நிகழ்ச்சியில் செயல் அலுவலர் நதியா, அறங்காவலர் திருவாசகம் அண்ணாமலை, வேளாளர் மத்திய சங்க தலைவர் ஞானசுந்தரம், ஒய்வு பெற்ற தமிழாசிரியர்கள் வேங்கடாச்சலம், வேலுச்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.