காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூலை 2024 10:07
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் காந்தி சாலையில் மருகுவார்குழலி உடனுறை வழக்கறுத்தீஸ்வரர் மற்றும் பராசரேசர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும், ஆனி மாதத்தில், ஆனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவ பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டிற்கான உற்சவம் நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, நேற்று காலை 7:30 மணிக்கு கோவில் கொடிமரத்திற்கு வேதவிற்பன்னர்கள் வாயிலாக மந்திரங்கள் ஓதப்பட்டு, பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. அதை தொடர்ந்து, சப்பரத்தில் அம்பிகையுடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய வழக்கறுத்தீஸ்வரர் வீதியுலா வந்தார். இரவு 8:00 மணிக்கு சுவாமி சிம்ம வாகனத்திலும், அம்பாள் கிளி வாகனத்திலும் உலா வந்தனர். மூன்றாம் நாள் உற்சவமான நாளை காலை பூத வாகனமும், இரவு ராவனேஸ்வரரர் உற்சவமும் நடக்கிறது. ஜூலை 13ம் தேதி காலை தேரோட்டம் நடைபெறுகிறது. ஜூலை 19ம் தேதி ரிஷப வாகனத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.