வனவாசம் சென்ற தர்மரிடம், மார்க்கண்டேய மகரிஷி கந்தப்பெருமானின் வரலாற்றை எடுத்துரைத்தார். சிவபார்வதி, அக்னி, கங்கை, கார்த்திகைப்பெண்கள், இந்திராதிதேவர்கள் ஆகியோருக்கும் முருகனுக்கும் உள்ள தொடர்பை விளக்குகிறார். மகாபாரத வனபர்வத்தின் கடைசி அத்தியாயத்தில் கந்தனின் திருநாமங்கள், துதிப்பாடல்கள் இடம்பெற்றுள்ளன. கந்தனின் பெருமைகளைக் குறிப்பிடும் பத்து அத்தியாயங்கள் வனபர்வத்தில் உள்ளன. மூவுலகத்திலும் புகழ் பெற்ற கந்தனைக் கண்டு பொறாமைப்பட்ட இந்திரன், வஜ்ராயுதத்தில் அவரை அடித்தான். அப்போது இருகூறாகப் பிளந்த கந்தனின் வலப்பக்கத்தில் இருந்து விசாகன் என்ற புதிய கடவுள் தோன்றினார். யாரையும் அழிக்கும் சக்தியுள்ள வஜ்ராயுதத்தாலேயே அழிக்க முடியாத கந்தனுக்கு இந்திரன், தன் பதவியை வழங்கினான். ஆனால், கந்தன் பெருந்தன்மையோடு இந்திரபதவியை ஏற்கவில்லை. தேவர்களின் சேனாதிபதியாக பதவியேற்றார். இதனால், கந்தனுக்கு தேவசேனாபதி என்ற பெயர் ஏற்பட்டது.