திருக்கடையூர் அபிராமி அம்மன் கோயிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூலை 2024 11:07
மயிலாடுதுறை; திருக்கடையூர் கோவிலில் அபிராமி அம்மனுக்கு ஆடிப்பூர மகோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் நடைபெற்றது.
திருக்கடையூர் கோவிலில் அபிராமி அம்மனுக்கு ஆடிப்பூர மகோற்சவ கொடியேற்றம் தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவார பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது சிவபெருமான் இத்தலத்தில் கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயருக்காக எமனை வதம் செய்ததால் இத்தலம் அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இத்தலத்தில் அபிராமி பட்டர் அவதரித்து அபிராமி அந்தாதியை இயற்றியது சிறப்பு. இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் ஆடிப்பூர மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.. இதனை முன்னிட்டு அபிராமி அம்பாள் சன்னதியில் உள்ள கொடிமரத்திற்கு முன்பு விநாயகர், அபிராமி அம்பாள், அபிராமி பட்டர் பல்லக்கில் எழுந்தருள தருமபுரம் ஆதீனம் 27 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து சிம்ம லக்னத்தில் ரிஷப கொடி ஏற்றி வைத்தனர். தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது 10-ம் நாள் திருவிழாவான வரும் ஆகஸ்ட் 6ம் தேதி திருத்தேர் உற்சவம், 7ம் தேதி புதன்கிழமை தீர்த்தவாரி நடைபெற உள்ளது விழா ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீன கோவில்களின் தலைமை கண்காணிப்பாளர் மணி திருக்கடையூர் கோவில் உள்துறை விருதகிரி ஆகியோர் தலைமையிலானோர் செய்திருந்தனர்.