பதிவு செய்த நாள்
29
ஜூலை
2024
10:07
பெங்களூரு நகரில் உள்ள பழமையான கோவில்களில் ஆர்.ஆர்., நகர் கஞ்சனஹள்ளியில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலும் ஒன்று.
பல புராண கதைகளுடன் இந்த கோவிலுக்கு தொடர்பு உள்ளது. ஏராளமான முனிவர்கள் இங்கு வந்து அம்மன் திருவடியில் பிரார்த்தனை செய்து, இங்கு முக்தி அடைந்தததாகவும் வரலாறுகள் கூறுகிறது. கடந்த 1960 துவக்கத்தில் திருச்சி மஹா சுவாமிகள் தனது சீடர்களுடன், திருச்சியில் இருந்து மைசூருக்கு காரில் சென்றார். அப்போது ஒரு இடத்தில் கருடன்கள் வட்டமடித்தன. இதனை கவனித்த திருச்சி மஹா சுவாமிகள் காரில் இருந்து இறங்கினார். கருடன்கள் வட்டம் அடித்த இடத்திற்கு நடந்து சென்றார். அந்த இடத்தில் ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு, கோவில் கட்ட முடிவு செய்தார். அங்கேயே குடிலும் அமைத்து தங்கி கோவிலை கட்டி முடித்தார்.
ராஜ கோபுரம்; கோவிலின் பிரதான நுழைவுவாயில் பகுதியில் உள்ள, ராஜகோபுரம் 108 அடி உயரம் கொண்டது. அந்த கோபுரத்தை பார்க்கவே பிரமிப்பாக இருக்கும். ராஜராஜேஸ்வரி அம்மன் திருவடியை வணங்கினால், வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகள் உடனடியாக தீர்ந்து போகும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23 ம் தேதி, அம்மனின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு நடக்கிறது. அது எப்படி நடக்கிறது என்பதற்கு இதுவரை விடை இல்லை. அம்மனின் மகிமையே காரணம் என்று நம்பப்படுகிறது. ராஜராஜேஸ்வரி அம்மனின் சிலை கருவறையில், ஆறு அடி உயரத்தில் பிரமாண்டமாக உள்ளது. கோவிலில் விநாயகர் மற்றும் பிற தெய்வங்களுக்கு தனி சன்னிதிகளும் உள்ளன.
தேரோட்டம்; கோவிலில் அனைத்து ஹிந்து பண்டிகைகளும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. பண்டிகைகளின் போது நடனம், இசை, பஜனை நிகழ்ச்சிகளும் இடம்பெறும். செவ்வாய், வெள்ளிக்கிழமைதோறும் கோவிலில் நடக்கும் சிறப்பு பூஜையில் காய்கறிகளை வைத்து அலங்காரம் செய்யப்படுகிறது. கோவிலில் நடக்கும் பிரம்ம உற்சவம், நவராத்திரி பண்டிகைகள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை கோவிலில் தேரோட்டமும் நடக்கும். தினமும் காலை 6:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரையும்; மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும்.