பதிவு செய்த நாள்
29
ஜூலை
2024
06:07
விருத்தாசலம்; விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள விருத்தாம்பிகை அம்மனுக்கு இன்று ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவ கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி அதிகாலை ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. காலை 9:00 மணிக்கு மேல், விருத்தாம்பிகை அம்மன் சன்னதியில் உள்ள கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, ஆழத்து விநாயகர், சண்முக சுப்ரமணியர் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளியதும், 10:30 மணிக்குள் கொடியேற்றம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். தொடர்ந்து காலை பல்லக்கிலும், இரவு கிளி, பூத, யானை, கமல, வெள்ளி அன்னம், குதிரை வாகனங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்வாக, வரும் 6ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு மேல், 6:00 மணிக்குள் சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. மறுநாள் அன்னபட்சி வாகனத்தில் தீர்த்தவாரி, இரவு ஸ்படிக பல்லக்கில் வீதியுலா, 8ம் தேதி அம்பாளுக்கு திருமாங்கல்யதாரணம், இரவு பஞ்சமூர்த்திகள் வீதியுலாவுடன் நிறைவு பெறுகிறது.