பதிவு செய்த நாள்
19
நவ
2012
11:11
நாகப்பட்டினம்: நாகை அடுத்த சிக்கல், சிங்காரவேலவர் கோவிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு, திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ய முருகப்பெருமான் சக்திவேல் வாங்கும் போது, முருகப்பெருமானின் மேனியெங்கும் வியர்க்கும் மகிமை நடந்தது.நாகை அடுத்த சிக்கலில் அறுபடை வீடுகளுக்கு இணையான சிங்காரவேலவர் கோவில் உள்ளது. முருகப்பெருமானின் அவதார நோக்கமான சூரசம்ஹாரத்திற்கு இக்கோவிலில் தான், முருகப்பெருமான், அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் சக்திவேல் வாங்கி, திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ததாக கந்த புராண வரலாறு. திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்வதற்காக, நேற்று முன்தினம் இரவு அன்னை வேல் நெடுங்கண்ணியிடம், சிங்காரவேலவர் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சிக்காக, திருத்தேரில் வீதியுலா வந்த முருகப்பெருமான் ஆவேசத்துடன் கோவிலுக்குள் வந்து அன்னையிடம் சக்திவேல் வாங்கும் போது ஆக்ரோஷத்துடன் காணப்பட்டார். அன்னையிடம் சக்திவேலை பெற்று, தமது சன்னதியில் அமர்ந்த, முருகப்பெருமானுக்கு மானிடருக்கு வியர்ப்பது போன்று திருமேனியெங்கும் வியர்வை பொழியும் மகிமை நடந்தது. முருகப்பெருமானின் ஆக்ரோஷ வெப்பத்தை தாங்கிக் கொள்ள இயலாமல் சன்னதியின் சுவர்களிலும் வியர்வை துளிகள் அரும்பியிருந்த காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. தொடர்ந்து இரவு 12:00 மணிக்கு முருகப்பெருமானுக்கு மகா அபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.