பதிவு செய்த நாள்
19
நவ
2012
11:11
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், நேற்று சூரசம்ஹாரம் லீலை நடந்தது. இன்று(நவ.,19) காலை தேரோட்டம் நடக்கிறது.கோயிலில், நவ., 13 முதல் நடந்த யாகசாலை பூஜைகள், நேற்று காலை பூர்த்தியானது. சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம் நடந்தது. உச்சிகாலை பூஜைக்கு பின், உற்சவர் சுப்பிரமணிய சுவாமி தங்க மயில் வாகனத்திலும், வீரபாகுத் தேவர் வெள்ளை குதிரை வாகனத்திலும் எழுந்தருளி, வீதி உலா வந்தனர். பின், சூரசம்ஹார லீலை நடந்தது. இன்று காலை கிரிவீதி, ரத வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது.
சோலைமலையிலும் லீலை: அழகர்கோவில், சோலைமலை முருகன் கோயிலிலும் சூரசம்ஹாரம் நடந்தது. மாலை 5 மணிக்கு முருக பெருமானுக்கு சாந்த அபிஷேகம் நடந்தது. இன்று காலை 7 மணிக்கு அபிஷேகமும், காலை 10.20 மணிக்கு திருக்கல்யாணமும், தொடர்ந்து நித்திய உற்சவருக்கு அபிஷேகம், பாவாடை தரிசனம் நடக்கிறது. மாலையில் பல்லக்கில் எழுந்தருளும் முருகப் பெருமான், கோயிலை வலம் வருகிறார். நாளை மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.