பதிவு செய்த நாள்
02
செப்
2024
02:09
மாமல்லபுரம்; ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ், மாமல்லபுரத்தில் உள்ள ஸ்தலசயன பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. ஸ்தலசயன பெருமாள், நிலமங்கை தாயார், ஆண்டாள் உள்ளிட்ட சுவாமியர் வீற்றுள்ளனர். இங்கு அவதரித்த பூதத்தாழ்வார் உள்ளிட்ட பன்னிரு ஆழ்வார்களும், பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். 108 வைணவ திவ்ய தேசங்களில் 63வதாகவும், நிலம் சார்ந்த தோஷங்களுக்கு பரிகார கோவிலாகவும் விளங்குகிறது. இக்கோவிலில், ராஜகோபுரம் உள்ளிட்ட திருப்பணிகள் செய்யப்பட்டு, கடந்த 1998ல் மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, 25 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை. ராஜகோபுரத்திற்கு முன்புறம், பழங்காலம் முதல் 16 கால் மண்டபம் இல்லை. எனவே, நன்கொடை வாயிலாக, இந்த மண்டபம் கட்ட, நீண்டகாலத்திற்கு முன் முடிவெடுக்கப்பட்டது. கோவில் அருகில், அர்ஜுனன் தபசு சிற்ப பாரம்பரிய சின்னம் உள்ள நிலையில், தொல்லியல் துறையின் தடை காரணமாக முன்புற மண்டபம் கட்டப்படவில்லை.
இந்நிலையில், தனிநபர் ஒருவர் நன்கொடை வசூலித்து, தன்னிச்சையாக மண்டபம் கட்டி, கடந்த 2018ல், புதிய மண்டபத்திற்கு மட்டும், தனியாக கும்பாபிஷேகம் நடத்தினார். அதன் முகப்பில், ஸ்தலசயன பெருமாள் சுதைச்சிற்பத்துடன், சிறிய கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் கோபுரம், கோவிலின் பிரதான ராஜகோபுரத்தை மறைப்பதாக உள்ளது. கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு, கடந்த பிப்.,1ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பதால், நுழைவாயில் பகுதியிலிருந்தே ராஜகோபுரத்தை தரிசிக்க வசதியாக, மண்டப கோபுரம் அகற்றப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அக்கோபுரம் அகற்றப்படாமல், ராஜகோபுரத்தை மறைப்பதாக உள்ளதால், பக்தர்கள், ஆன்மிக ஆர்வலர்கள் அதிருப்தியில் உள்ளனர்.