திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 15ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, தென்பெண்ணையில் இருந்து தீர்த்த கலசம் கொண்டுவரப்பட்டு யாகசாலை பூஜைகள் துவங்கியது. திருக்கோவிலூர், கீழையூர், அருள்மிகு சிவானந்தவள்ளி உடனுறை வீரட்டானேஸ்வரர் கோவில் அட்டவீரட்டானங்களில் இரண்டாவது தலமாக விளங்குகிறது. பாடல் பெற்ற பழமையான கோவில். புனரமைக்கப்பட்டு, வரும் 15ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. முன்னதாக இன்று காலை 10:30 மணிக்கு தென்பெண்ணை நதி கரையில் வேத மந்திரங்கள் முழங்க தீர்த்த சங்கிரகணம் செய்யப்பட்டு, புனித நீர் கலசத்தில் சேமிக்கப்பட்டு, யாகசாலை பூஜைக்கு மேளதாளம் முழங்க கொண்டு வரப்பட்டது. மாலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, சோமகும்ப பூஜை, அங்குரார்பணம், யாக வேள்வி சிவாச்சாரியார்கள் சிவரக் ஷாபந்தனம் நடந்தது. வரும் 15ம் தேதி காலை 6:30 மணிக்கு மேல் 8:00 மணிக்குள் மூலஸ்தான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை ஏற்பாட்டில், ஊர் முக்கியஸ்தர்கள் முன்னின்று மேற்கொண்டு வருகின்றனர்.