தினமலர் செய்தி எதிரொலி; திருவாடானை கோயிலில் புனரமைப்பு பணி துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11செப் 2024 03:09
திருவாடானை; திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலை புனரமைக்கும் பணி தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக துவங்கியது. திருவாடானையில் ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது. மழைக் காலங்களில் மண்டபங்களில் தண்ணீர் வடிந்ததால் பாதிப்பு ஏற்பட்டது. ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு சேதமடைந்தது. கோயிலை சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தினர். அதனைத் தொடர்ந்து கோயிலை புனரமைக்க அரசு ரூ.2 கோடி ஒதுக்கியது. சில மாதங்களுக்கு முன்பு முதல் கட்டமாக கோயிலின் மேற்பகுதியில் பழைய தட்டோடுகளை அகற்றும் பணி நடந்தது. கோயில் வளாகத்தை சுற்றிலும் சிமென்ட் பாதை அமைக்க பொருட்கள் இறக்கி வைக்கப்பட்டுள்ளது. பல மாதங்கள் ஆகியும் பணிகள் துவங்கவில்லை. பக்தர்கள் கூறுகையில், பருவமழை துவங்க உள்ளது. இந்நிலையில் தட்டோடுகள் அகற்றப்பட்டதால் மழை பெய்யும் போது நீர் வடியும். இதனால் கோயில் பிரகாரங்களில் பாதிப்பு ஏற்படும். ஆகவே பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதனை தொடர்ந்து பணிகள் துவங்கி நடக்கிறது. இப்பணிகளை அதிகாரிகள் அடிக்கடி பார்வையிட்டு முறையாகவும், தரமாகவும் நடக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தினர்.