பதிவு செய்த நாள்
21
செப்
2024
09:09
சென்னை: தீட்சிதர்கள் விற்றதாகக் கூறப்படும் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான, 2,000 ஏக்கர் நிலங்கள் குறித்த விபரங்களை, ஆவணங்களுடன் அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு, ஹிந்து அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழக ஹிந்து அறநிலையத் துறை சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: மாநில அளவிலான நிபுணர் குழு ஒப்புதல் பெறாமல், சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரங்களைச் சுற்றி, எந்த கட்டுமானங்களையும் மேற்கொள்ள, பொது தீட்சிதர் குழுவுக்கு தடை விதிக்க வேண்டும்.
கடந்த 2008 முதல் 2014 வரை, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோவில் இருந்தது. அப்போது, கோவிலின் வருவாய் 3 கோடி ரூபாய்க்கு மேல் இருந்தது.ஆனால், 2014ல் பொது தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் கோவில் வந்தபின், 2.09 லட்சம் ரூபாய் மட்டுமே வருவாய் என, வருமான வரி தாக்கல் செய்துள்ளனர். தவறான நிர்வாகத்தால் வருவாய் குறைந்துள்ளது. எனவே, கோவிலின் வரவு- செலவை தணிக்கை செய்ய கணக்குகளை சமர்ப்பிக்கும்படி, பொது தீட்சிதர் குழு செயலருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
நீதிபதிகள் கேள்வி; இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிதம்பரம் நடராஜர் கோவிலின் தணிக்கை செய்யப்பட்ட வரவு- செலவு கணக்கு விபரம், மூடி முத்திரையிட்ட உரையில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, வரவு செலவு கணக்கு புத்தகங்களை தாக்கல் செய்யாமல், வருமான வரி தாக்கலுக்காக தணிக்கை செய்த கணக்கு விபரங்களை தந்துள்ளது ஏன் என, பொது தீட்சிதர்கள் தரப்புக்கு, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.பின், பொது தீட்சிதர்கள் குழு சார்பில் வழக்கறிஞர் ஹரிசங்கர் வாதாடியதாவது:
அதிக கணக்கு புத்தகங்கள் உள்ளதால், அதை தாக்கல் செய்வது சிரமம். கோவிலுக்குச் சொந்தமான 1,000 ஏக்கர் நிலத்தை, அறநிலையத் துறையின் தாசில்தார் நிர்வகித்து வருகிறார். அவற்றில் இருந்து, வாடகை வருவாயாக வெறும், 93,000 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. மன்னர்கள், புரவலர்கள் 3,000 ஏக்கர் நிலங்களை தானமாக வழங்கினர். தற்போது, 1,000 ஏக்கர் நிலங்களே உள்ளன. அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.பக்தர்கள் வழங்கும் காணிக்கையை, தீட்சிதர்கள் எடுத்துச் செல்கின்றனர். கோவில் நிர்வாகத்துக்கு தேவைப்படும்போது, தீட்சிதர்கள் பங்களிப்புத் தொகையை வழங்குகின்றனர். காணிக்கை வரவு செலவு கணக்கை பராமரிக்க, தனித்திட்டம் வகுக்கவும் தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் வாதாடினார்.
அறநிலையத் துறை சார்பில், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் வாதாடியதாவது: அறநிலையத் துறை வசம் கோவில் வரும்போது, நடராஜர் கோவிலுக்குச் சொந்தமாக 1,000 ஏக்கர் மட்டுமே இருந்தது. 2,000 ஏக்கர் நிலங்களை, தீட்சிதர்கள் விற்று விட்டனர். அதுகுறித்த விபரங்களை வழங்கவில்லை. பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை, கோவில் கணக்கில் தீட்சிதர்கள் செலுத்துவதில்லை. அதை எடுத்துச் செல்கின்றனர். தவறான நிர்வாகம் காரணமாக, கோவில் வருமானம் பெருமளவு குறைந்துள்ளது. தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் கோவில் வந்தது முதல் இன்று வரை, வரவு, செலவு கணக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் வாதாடினார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
அறிக்கை; கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலங்கள் விற்கப்பட்டதும், 1,000 ஏக்கர் நிலங்களில் இருந்து லட்சத்துக்கும் குறைவாக வருவாய் கிடைப்பதும், பக்தர்கள் காணிக்கை கோவில் கணக்கில் செலுத்தப்படுவதில்லை என்பதையும் கேட்கும்போது, ஆச்சரியம், அதிர்ச்சி அளிக்கிறது. எனவே, 2017 - 18ம் ஆண்டு முதல் 2021 - 22ம் ஆண்டு வரை வரவு செலவு கணக்கு புத்தகங்களை, தீட்சிதர்கள் தாக்கல் செய்ய வேண்டும். காணிக்கை, செலவுகள் குறித்து கணக்கு வைப்பதற்கான நடைமுறையை உருவாக்கி, அதன் வரைவை தாக்கல் செய்ய வேண்டும். கோவிலுக்குச் சொந்தமாக, தற்போது எவ்வளவு பரப்பு நிலம் உள்ளது என்பது குறித்து, தாசில்தாரர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.தீட்சிதர்கள் 2,000 ஏக்கர் நிலங்களை விற்பனை செய்த குற்றச்சாட்டு குறித்து, முழு விபரங்களை ஆவணங்களுடன் அறிக்கையாக, அறநிலையத் துறை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை அக்., 3க்கு தள்ளி வைத்தனர்.