அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் அப்பரடிகள் சிவநெறி வழிபாட்டு திருக்கூட்டத்தின் உழவாரப்பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22செப் 2024 11:09
அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் அப்பரடிகள் சிவநெறி வழிபாட்டு திருக்கூட்டத்தின் 500 வது மாத உழவாரப்பணி மற்றும் சிவாலய வழிபாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் முன்பு உள்ள ஸ்ரீ வியாசராஜரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில் 500 ஆண்டுகள் பழமையானது. இந்தக் கோவில் சிதலமடைந்து இருந்த நிலையில் விஜயமங்கலம் கொங்கு மண்டல அப்பரடிகள் சிவநெறி வழிபாட்டு திருக் கூட்டத்தின் அப்பரடி பொடி புலவர் சொக்கலிங்கம் வழிகாட்டுதல் படி தொடர்ந்து உழவர் பணிகள் நடைபெற்றது. இதனால் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில் வெகு விரைவாக புனரமைப்புகள் மற்றும் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கொங்கு மண்டலம் அப்பரடிகள் சிவநெறி வழிபாட்டு திருக்கூட்டம் 1981ம் ஆண்டு விஜயமங்கலம் கோவர்த்தனாம்பிகை உடனமர் ஸ்ரீ நாகேஸ்வரர் பெருமான் கோவிலில் முதல் உழவாரப்பணிகள் தொடங்கப்பெற்றது. தற்போது 500வது மாத உழவாரப்பணி விழாவை நடத்தும் அப்பரடி பொடி புலவர் சொக்கலிங்கம் முன்னிலையில் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் உழவாரப் பணிகள் நேற்று காலை 8:00 மணி முதல் 12 மணி வரையிலும், அதனைத் தொடர்ந்து அவிநாசி அடுத்த ஆட்டையாம்பாளையத்தில் உள்ள செந்தூர் மஹாலில் சிவாலய வழிபாடு மற்றும் சிவனடியார்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி மதியம் ஒரு மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்,செந்தூர் மஹால் மாரப்பகவுண்டர், ஓதியப்பன் ஆகியோர் விநாயகர் வழிபாடு,விடை கொடியேற்றுதல், கொடி காவி ஓதுதல் ஆகியவற்றை துவக்கி வைத்தனர். அப்பரடி பொடி புலவர் சொக்கலிங்கம் நிகழ்ச்சிக்கான வரவேற்புரை வழங்கினார். பவானி நம்பியாரூரன் வேலுச்சாமி விழா அறிக்கை வாசித்தார்.
விழாவில் 1981 முதல் உழவாரப்பணிகள் புரிந்த 500 சிவாலயங்களில் பட்டியல் நூல், 1984ல் நடைபெற்ற வடபுல திருத்தல பயண நூல் மற்றும் 1985ல் நடைபெற்ற தில்லை திருநடைப் பயண நூல் ஆகியவற்றை குரு மகா சந்நிதானங்கள் பேரூர் ஆதீனம் சாந்தலிங்கம் மருதாசல அடிகளார் தலைமையில்,கௌமார மடாலயம் சிரவை ஆதீனம் இராமானந்த குமரகுருபர ஸ்வாமிகள் ஆசியுரையுடன் கூனம்பட்டி மாணிக்கவாசகர் மடாலயம் நடராஜர் ஸ்வாமிகள் ஆகியோர் வெளியிட்டனர். இந்நிகழ்ச்சிக்கான வாழ்த்துரையை சைவ சித்தாந்த ஞான பானு சென்னியப்பனார், சம்பந்த சரணாலயர் பழனி முத்துசாமி, நம்பி ஆரூரர் சென்னை முருகேசன் ஆகியோர் வழங்கினர். மாணிக்கவாசகர் அருட்பணி மன்ற அறக்கட்டளை பேரூர் குமரலிங்கம் சிவனடியார், திருநணா திருக்கூட்ட அறக்கட்டளை தியாகராஜன், சிவசண்முகம் ஆகியோர் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினர். "ஞானபாரதி அனந்தகிருஷ்ணன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். இதில் தமிழகத்திலிருந்து இருபதுக்கும் மேற்பட்ட சிவனடியார் கூட்டத்தினர் கலந்து கொண்டனர்.