ஸ்ரீவில்லிபுத்தூர்; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் புரட்டாசி அமாவாசை வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று காலை 6:00 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். மதியம் 12: 30 மணி வரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலை ஏறியதாக வனத்துறையினர் தெரிவித்தனர். கோயிலில் சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு அமாவாசை வழிபாடு பூஜைகளை பூசாரிகள் செய்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனார். இதனை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு நகரங்களில் இருந்தும் மதுரையில் இருந்தும் அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. வத்திராயிருப்பு, சாப்டூர் போலீசார், வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.