பதிவு செய்த நாள்
08
அக்
2024
02:10
மனிதர்கள் வாழ்க்கையில் சந்தோஷம், கவலை எதுவாக இருந்தாலும், சாமியை தரிசனம் செய்வர். ஆனால் கோவில் கருவறைக்குள் சென்று, சாமியை தரிசனம் செய்வது இயலாத விஷயம். கருவறை படி வரை சென்றுவிட்டோம். உள்ளே சென்று சாமியை தரிசிக்க முடியவில்லையே என்று, பக்தர்களுக்கு கவலை இருக்கலாம். ஆனால் கருவறைக்குள் சென்று, சாமியை தரிசிக்கவும் ஒரு கோவில் உள்ளது. ஹாசனில் இருந்து 18 கிலோ மீட்டர் துாரத்தில் உள்ளது கொண்டாஜி கிராமம். இந்த கிராமத்தில் அல்லாலநாதர் கோவில் அமைந்துள்ளது. சென்னகேசவ பெருமாளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவிலில் ஒரே கல்லில் ஆன, 18 அடி உயர கருங்கல்லால் ஆன சிலை உள்ளது. சங்கு, சக்கரம், தாமரையை கையில் தாங்கி பிடித்த பிடி சென்னகேசவ பெருமாள் காட்சி அளிக்கிறார். கடவுளின் தனி சிறப்பு வாய்ந்த முகபாவனை பக்தர்களை புரிப்படைய செய்கிறது. இந்த கோவிலில் கருவறைக்குள் சென்று, பெருமாளை தரிசிக்கும் வாய்ப்பு உள்ளது. மாடிப்படிகளில் ஏறிச் சென்று, பெருமாளுக்கு அபிஷேகம் செய்ய பக்தர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. கோவிலுக்கு அருகில் ஏரியும் உள்ளது. அங்கு படகு சவாரி நடக்கிறது. சாமி தரிசனம் முடிந்து, பொழுதுபோக்க ஏற்ற இடமாக உள்ளது. தினமும் காலை 6:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, கோவில் நடை திறந்து இருக்கும்.
எப்படி செல்வது?; பெங்களூரில் இருந்து 200 கி.மீ., துாரத்தில் இந்த கோவில் உள்ளது. மெஜஸ்டிக்கில் இருந்து ஹாசனுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் உள்ளது. அங்கிருந்து பேலுார் செல்லும் வழியில், கொண்டாஜி கிராமம் உள்ளது. ரயிலில் சென்றால் ஹாசனில் இறங்கி அங்கிருந்து, மாற்று பஸ், கார், ஆட்டோக்களில் செல்லலாம்.