மானாமதுரை அருகே முற்கால பாண்டியர்களின் விநாயகர் சிற்பம் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18அக் 2024 03:10
மானாமதுரை; மானாமதுரை அருகே பாப்பாங்குளத்தில் முற்கால பாண்டியர்களின் விநாயகர் சிற்பத்தை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள பாப்பாங்குளம் கிராமத்திற்கு மதுரை லதா மாதவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் மீனாட்சி சுந்தரம் கள ஆய்வுக்குச் சென்ற போது அங்குள்ள நீலமேக விநாயகர் மற்றும் பதினெட்டாம்படி கருப்பு கோவிலின் உட்புறத்தில் உள்ள விநாயகர் சிற்பம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய முற்காலப் பாண்டியர்களின் காலத்தைச் சேர்ந்த சிற்பம் என்பதை கண்டுபிடித்தார். இது குறித்து அவர் கூறியதாவது ; இந்த சிற்பம் 3அடி உயரமும் இரண்டரை அடி அகலமும் கொண்ட ஒரு பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது, இந்த சிற்பமானது 4 கரங்களுடன் வடிக்கப்பட்டுள்ளது. பின் வலது கரத்தில் மழுவும் பின் இடது கரத்தில் பாசம் என்ற ஆயுதமும் முன் வலது கரத்தில் உடைந்த தந்தத்தையும் முன் இடது கரத்தில் மோதகத்தை தும்பிக்கையால் எடுத்தபடியும் விநாயகர் சிற்பம் காணப்படுகிறது, தலையில் கரண்ட மகுடம் செதுக்கப்பட்டுள்ளது.மேலும் மார்பில் சவடி,சரப்பளி, கண்டிகை போன்ற ஆபரணங்கள் அணிந்தபடியும் 2 கால்களிலும் தண்டை அணிந்தபடியும் லளிதாசனக் கோலத்தில் அமர்ந்த நிலையில் முற்கால பாண்டியர்களுக்கே உரித்தான கலை நயத்தில் சிற்பம் சிறப்பாக வடிக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தினை பார்க்கும் போது முற்கால பாண்டியரின் கோவில் இங்கு இருந்திருக்க வேண்டும், என்றார்.