பதிவு செய்த நாள்
19
அக்
2024
05:10
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் இன்று ஐப்பசி மாத கிருத்திகை விழா ஒட்டி அதிகாலை, 4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்ககீரிடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காவடி மண்டபத்தில், காலை, 9:30 மணிக்கு உற்சவர் முருகப்பெருமானுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் வெள்ளிமயில் வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி தேர்வீதியில் ஒரு முறை வலம் வந்து அருள்பாலித்தார். இன்று கிருத்திகை விழா மற்றும் அரசு பள்ளி, கல்லுாரிகள் விடுமுறை என்பதால் வழக்கத்திற்கு மாறாக பக்தர்கள் வந்து, இரண்டரை மணி நேரம் பொதுவழியில் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
* ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கருக்கு மேற்கில் பொன்னையாற்றங்கரையில் அமைந்துள்ளது வள்ளிமலை. திணைப்புலம் காத்த வள்ளியம்மையை முருகப்பெருமான் கவர்ந்த ஆன்மிக சிறப்பு மிக்கது இந்த தலம். மலையடிவாரத்தில் உற்சவர் கோவிலும், மலை மீது வள்ளி, தெய்வானை உடனுறை முருகப்பெருமான் குகைக்கோவிலும் அமைந்துள்ளன. உற்சவர் கோவில் மற்றும் மலைக்கோவிலில் நேற்று ஐப்பசி கிருத்திகை உற்சவம் நடந்தது. காலை 8:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. அதைத் தொடர்ந்து வெள்ளி காப்பு அலங்காரத்தில் உற்சவர் அருள்பாலித்தார். திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலுார் மாவட்டங்களை சேர்ந்த திரளான பக்தர்கள், சுவாமியை தரிசனம் செய்தனர். இதே போல் திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே. பேட்டை அடுத்த நெல்லிக்குன்றம் மலைக் கோவில் மற்றும் நெடியம் கஜகிரி மலைக் கோவிலிலும் கிருத்திகை உற்சவம் நடந்தது.