பெ.நா.பாளையம்; சின்னதடாகம் அருகே உள்ள, 24 வீரபாண்டி ஊராட்சிக்கு உட்பட்ட கோதண்ட ராமர் பஜனை திருக்கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை உற்சவம் நடந்தது.
புரட்டாசி மாதத்தில் ஐந்து சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் நேற்று முன்தினம் ஐந்தாவது சனிக்கிழமை விரதம் இருந்தனர். இங்குள்ள கோவிலில் சீதாலட்சுமி சமேத கோதண்ட ராமர், ஒன்னம்மாள் சமேத அட்டிதொட்டராயர் மற்றும் அய்யா சுவாமி ஆகிய மூன்று தெய்வங்களும் திருக்கோவிலில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். கோவிலின் முக்கிய விழாக்களில் ஒன்றான கோதண்ட ராமர் பஜனை புரட்டாசி மாதத்தின் ஐந்தாம் சனிக்கிழமை விழா, நேற்று முன்தினம் நடந்தது. நிகழ்ச்சியில், சீதாலட்சுமி சமேத கோதண்ட ராமர் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வீரபாண்டி கிராம பொதுமக்கள் மற்றும் கிருஷ்ண லீலா பிருந்தாவன் பஜனை குழுவினர் செய்து இருந்தனர்.