பதிவு செய்த நாள்
22
அக்
2024
10:10
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் கிழக்கு ராஜவீதி, பேருந்து நிலையம்அருகில், நகரீஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை பராமரிப்பில் உள்ள கோவில்கள் பல்வேறு திருப்பணிகளுடன் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 18ம் தேதி, காலை 9:30 மணிக்கு கணபதி பூஜையுடன் விழா துவங்கியது. நேற்று, அதிகாலை 4:50 மணிக்கு கலச புறப்பாடும், 5:00 மணிக்கு விமானத்திற்கும், 5:25 மணிக்கு மூலஸ்தானம் மற்றும் பரிவாரங்களுக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் விமரிசையாக நடத்தப்பட்டது. காலை 9:00 மணிக்கு மஹா அபிஷேகம் நடந்தது.
அழிசூர் திரவுபதியம்மன்; உத்திரமேரூர் ஒன்றியம், அழிசூர் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. சிறிய அளவில் இருந்த இக்கோவிலை சற்று பெரிய அளவில் கட்ட கிராமத்தினர் முடிவு செய்தனர். அதன்படி, பல்வேறு திருப்பணிகளுடன் கோவில் புதிதாக கட்டப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 18ம் தேதி காலை 8:00 மணிக்கு புதிய சிலைகளுக்கும், விமான கலசங்களுக்கும் கரிகோலம் நடந்தது. நேற்று, காலை 10:00 மணிக்கு விமான கோபுர கலசத்திற்கும், தொடர்ந்து திரவுபதியம்மனுக்கும் புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மாலை 6:00 மணிக்கு திரவுபதியம்மன் திருக்கல்யாண உற்சவமும், திருவீதியுலாவும் நடந்தது.
ஊத்துக்காடு மாரியம்மன்; ஊத்துக்காடு மாரியம்மன் கோவில், பல லட்சம் ரூபாய் செலவில், புதிதாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 14ம் தேதி பந்தகால் நடும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று, காலை 8:30 மணிக்கு கலசப் புறப்பாடு நடந்தது. அதை தொடர்ந்து, காலை 9:30 மணி அளவில் கோவில் கோபுர கலசத்தின் மீது, சிவாச்சாரியார்கள் புனிதநீரை ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடத்தினர். பிற்பகல், 12:00 மணிக்கு மூலவர் மாரியம்மனுக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது.