பதிவு செய்த நாள்
25
அக்
2024
12:10
மதுரை; திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டியின் போது கூடுதல் கட்டணம் வசூலிக்க பிறப்பித்த உத்தரவை, ரத்துசெய்ய கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.
திருச்செந்துார் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சாதாரண நாட்களில் கட்டணமின்றி தரிசனம், விரைவு தரிசனத்திற்கு நபருக்கு, 100 ரூபாயும்; கூட்டம் அதிகமான நாட்களில், கட்டணமின்றி தரிசனம், விரைவு தரிசனத்திற்கு, 200 ரூபாயும் வசூலிக்கும் நடைமுறை உள்ளது. கந்த சஷ்டி விழாவின் போது மட்டும் விரைவு தரிசன கட்டணமாக நபருக்கு, 1,000 ரூபாய், விஸ்வரூப தரிசனத்திற்கு 2,000 ரூபாய், அபிஷேக தரிசனத்திற்கு 3,000 ரூபாய் வசூலிக்க, அறநிலையத்துறை 2018ல் உத்தரவு பிறப்பித்தது; அதை அமல்படுத்தவில்லை. அதேநேரம், 2023ல் கந்த சஷ்டியின் போது அக்கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதற்கு எதிராக பக்தர்கள் போராடவே, கட்டண உயர்வை கோவில் நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது.நடப்பாண்டு கந்த சஷ்டியின் போது, கூட்டத்தை கட்டுப்படுத்த விரைவு தரிசனக் கட்டணம் நபருக்கு, 1,000 வசூலிக்க உள்ளதாக, செப்., 18ல் கோவில் அலுவலக சுவரில் அறிவிப்பு இடம்பெற்றது. இதில், தக்கார் கையொப்பம் இல்லை. பக்தர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, அறிவிப்பை நாங்கள் வெளியிடவில்லை என, கோவில் நிர்வாகம் மறுத்தது. கூட்டத்தை கட்டுப்படுத்த கூடுதல் கட்டணம் நிர்ணயம் செய்வது ஏற்புடையதல்ல; கந்த சஷ்டி விழாவில் கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும். அதற்காக, 2018ல் வெளியான உத்தரவை ரத்து செய்ய வேண்டும். பக்தர்கள் காத்திருப்பதை தவிர்க்க, திருப்பதி கோவிலில் உள்ளது போல, ஆதார் அடிப்படையில் தரிசன நேரம் குறிப்பிட்டு, முன் கூட்டியே இணையதளம் மூலம் டோக்கன் வழங்க வேண்டும். தரிசன டோக்கன் வழங்க தனி கவுன்டர்களை திறக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு, அறநிலையத்துறை முதன்மைச் செயலர், கமிஷனர், கோவில் இணை கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, நவ., 7ம் தேதிக்கு ஒத்திவைத்தது.