பதிவு செய்த நாள்
25
அக்
2024
12:10
தொண்டி; தொண்டி உந்திபூத்த பெருமாள் கோயிலில் சேதமடைந்த சுற்றுச்சுவரை தினமலர் நாளிதழ்செய்தி எதிரொலியாக சீரமைக்க ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். விரைவில் சீரமைக்கப்படும் என்றனர்.
தொண்டியில் மன்னர்கள்காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான உந்திபூத்த பெருமாள் கோயில் உள்ளது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் இங்கு அருள்பாலிக்கிறார். ராமானுஜர் வழிபட்ட தலம். இங்கு கருடர், ஆஞ்சநேயர், கிருஷ்ணர், ஆதிசேஷன், ராமானுஜர்சன்னதிகள் உள்ளன. புரட்டாசி மாதத்தில் ஏராளமான பக்தர்கள் கூடுவர். இக்கோயில் சுற்றுச்சுவர்செங்கல், மண்ணால் கட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவ.4ல் பலத்த மழையின் போது கோயில் வடக்கு பகுதியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. அதன் பின் 11 மாதங்கள் ஆகியும்சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பக்தர்கள் கூறுகையில், இக்கோயிலுக்கு நிலம், கடை வாடகை மூலம் ஆண்டுக்கு ரூ.20 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு இடிந்து விழுந்த சுற்றுச்சுவரை சீரமைக்கவில்லை. தற்போது பருவமழை துவங்கியுள்ளதால் அந்த சுவர் மேலும் இடிந்து விழும்நிலையில் உள்ளது.ஹிந்து கோயில்களில்இருந்து வருவாயை மட்டும் ஹிந்து அறநிலையத்துறையினர் எதிர்பார்க்கின்றனர். ஆனால் கோயிலை பராமரிக்க தயக்கம் காட்டுவது ஏன் என்று தெரியவில்லை என்றனர்.
இதுகுறித்து நேற்று முன்தினம் தினமலர்நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று ராமநாதபுரம் ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி பொறியாளர் சங்கிலி, காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் செயல் அலுவலர் விஸ்வநாத், ஹிந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சண்முகசுந்தரம் மற்றும் அலுவலர்கள் ஆய்வுசெய்தனர். அவர்கள் கூறுகையில், சுவர் இடிந்து விழுந்த பகுதி ஆய்வு செய்யப்பட்டது. சீரமைக்க திட்ட மதிப்பீடு தயாரித்து அனுப்பப்படும். அனுமதி வழங்கியவுடன் விரைவில்பணிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.