காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் காமாட்சியம்மனின் ஜென்ம தினத்தையொட்டி, காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அனுக்கிரகத்துடன், ஐப்பசி பூரம் பால்குட விழா காஞ்சிபுரத்தில் நேற்று நடந்தது. விழாவையொட்டி, காஞ்சிபுரம் சங்கரமடத்தில் இருந்து, மாலை 3:30 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து பம்பை, சிலம்பு கலைஞர்கள் பக்தி பாடல்களை பாடியபடி முன்னே செல்ல அதை தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பெண்கள், பால்குடத்தை ஏந்தியபடி பக்திபரவசத்துடன் ஊர்வலமாக காமாட்சியம்மன் கோவில் சென்றனர். அங்கு அம்பாளுக்கும், பிலகாசத்திற்கும் சிறப்பு அபிஷேக ஆராதனையுடன், அம்பாளுக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாட்டை காமாட்சியம்மன் கோவில் ஆதின பரம்பரை தர்மகர்த்தாவின் ஸ்ரீகார்யம் சுந்தரேச அய்யர், கோவில் மணியகாரர் சூரியநாராயணன், கோவில் உதவி ஆணையர் நிர்வாக அதிகாரி ஸ்ரீனிவாசன், காமாக்ஷி அம்பாள் தேவஸ்தான ஆதீன பரம்பரை ஸ்தலத்தார், ஸ்தானீர்கள், தேவஸ்தான சிப்பந்திகள், ஐப்பசி பூரம் விழா குழுவினர் செய்திருந்தனர்.