திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில், மணவாள மாமுனிகள் விழாவின் நிறைவு நாளான இன்று (5ம் தேதி) காலை 6:00 மணிக்கு மூலவர் பெருமாள் விஸ்வரூப தரிசனம், 6:45 மணி முதல் 8:45 மணி வரை நித்திய பூஜை, தொடர்ந்து மணவாள மாமுனிகள் சன்னதியில் இருந்து எழுந்தருளி பெருமாள், தாயார், வேணுகோபாலன் சன்னதியில் மங்களா சாசனம், சேஷ வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. பகல் 11:00 மணிக்கு மணவாள மாமுனிகள் சன்னதியில் ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீசபெருமாள் எழுந்தருளி, உடையவர், மணவாள மாமுனிகளுக்கு திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை நான்காயிர திவ்ய பிரபந்த சேவை சாற்றுமறை, தீர்த்த பிரசாத வினியோகம், சுவாமி ஆஸ்தானம் எழுந்தருளினார். ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் உத்தரவின் பேரில், கோவில் ஏஜென்ட் கோலாகலன் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.