நத்தம், நத்தம் அருகே சிறுகுடி ஊராட்சி பூசாரிபட்டி மந்தை முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்களுக்கு கலந்து கொண்டனர். விழாவையொட்டி அலங்கரிக்கப்பட்ட யாகசாலையில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மஹாகணபதி ஹோமம், மகாலெட்சுமி ஹோமம் மற்றும் முதல் காலயாக பூஜைகள் நடந்தது.தொடர்ந்து நேற்று இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. பின்னர் அதே யாகசாலையில் இன்று நான்காம் கால யாகசாலை பூஜைகளை தொடர்ந்து காசி, ராமேஸ்வரம், கங்கை, காவேரி,கரந்தமலை அழகர்மலை, திருமலைக்கேணி உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்டிருந்த தீர்த்தகுடங்கள் மேளதாளம் முழங்க, ஊர்வலமாக கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. பின்னர் அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மேளதாள இசையுடன் புனித நீர் கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது. தொடர்ந்து மூலவர் சன்னதிகளில் சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. இதில் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலை சுற்றி நின்று சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு புனித தீர்த்தமும் பூஜை மலர்களும் வழங்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு உணவு அன்னதானம் வழங்கபட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பூசாரிபட்டி கிராம ஊர் பொதுமக்கள், திருப்பணிகுழுவினர், காரணக்காரர்கள் செய்திருந்தனர்.