திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில், கார்த்திகை மாதம் வரும் கிருத்திகை விழா, கார்த்திகை தீபத்திருவிழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அன்று, அதிகாலை 4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்ககீரிடம், பச்சை மாணிக்க மரகதகல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து மஹா தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து, காலை 9:00 மணிக்கு, மண்டபத்தில், உற்சவர் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு, உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில், தேர்வீதியில் பிரசாத கடை அருகே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, அங்கு வைக்கப்பட்ட சொக்கப்பனையில், நெய் தீபம் ஏற்றப்படுகிறது. அதே நேரத்தில், கோவிலின் எதிரில் உள்ள, பச்சரிசி மலையில், பெரிய அகல் விளக்கில், 550 கிலோ நெய், இரண்டரை அடி கனம், 10 மீ., நீளமுள்ள திரியில், மஹா தீபம் ஏற்றப்படும். இந்த தீபத்தை பார்த்த பின், திருத்தணி நகரம் முழுதும் வீடுகள் மற்றும் கடைகளில், நெய் தீபம் ஏற்றி வழிபடுவர்.