1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரிய விநாயகர் சிற்பம் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜன 2025 04:01
விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவர் கால விநாயகர் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகேயுள்ள கள்ளக்கொளத்தூர் கிராமத்தில், அப்பகுதியைச் சேர்ந்த ஜெயராமன், தியாகு உள்ளிட்டோர் அளித்த தகவலின் பேரில், விழுப்புரம் வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் உள்ளிட்ட குழுவினர், கள்ளக்கொளத்துார் கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பல்லவர் காலத்தைச் சேர்ந்த அரிய விநாயகர் சிற்பம் கண்டறியப்பட்டது.
இதுகுறித்து, செங்குட்டுவன் கூறியதாவது: கள்ளக்கொளத்தூர் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் உள்ள தூர்ந்து போன கிணறு ஒன்றின் மேற்பரப்பில், தலைகுப்புற கவிழ்ந்த நிலையில் இருந்த சிற்பத்தை, அண்மையில் அக்கிராம மக்கள் எடுத்து பார்த்துள்ளனர். அது ஒரு கலைநயம் மிக்க விநாயகர் சிற்பமாகும். பெரிய அளவிலான கண்கள், நீண்டிருக்கும் துதிக்கை, அகன்ற காதுகளுடன் விநாயகர் சிலையாக காட்சியளிக்கிறார். நான்கு கரங்களுடன் காணப்படும் விநாயகர், கால்களை மடக்கிய நிலையில் பத்மாசனத்தில் அமர்ந்துள்ளார். விநாயகரது பின் வலது கரத்தில் பாச கயிறும், இடது கரத்தில் மழுவும் காணப்படுகின்றன. முன்னிரு கரங்களில் இருப்பது தெளிவாக தெரியவில்லை. இந்தச் சிற்பம், பல்லவர் காலத்தைச் சேர்ந்தது (கி.பி.8ம் நூற்றாண்டு) என்பதை, மூத்த தொல்லியல் ஆய்வாளர் ஸ்ரீதரன் உறுதிப்படுத்தியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது கிடைத்துள்ள விநாயகர் சிற்பம், மிகவும் வித்தியாசமாகவும், அரியதாகவும் அமைந்துள்ளது. சிற்பம் வடிக்கப்பட்டுள்ள கல், மணற்கல் வகையைச் சார்ந்ததாக கருதப்படுகிறது. பல்லவர் கலை வரலாற்றுக்கு இந்த விநாயகர் சிற்பம் புதிய வரவாகும். 1200 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்தச் சிற்பத்தை உரிய முறையில் பாதுகாக்க வேண்டும் என்று அவர் கூறினார்.