பதிவு செய்த நாள்
10
பிப்
2025
05:02
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் இன்று பாலாலயம் பூஜைகளுடன் துவங்கியது. கோயிலில் கும்பாபிஷேகம் முடிந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இந்த ஆண்டு சுப்பிரமணிய சுவாமி கோயில், உப கோயில்களான மலை மேல் காசி விசுவநாதர் கோயில், சன்னதி தெரு சொக்கநாதர் கோயில், மலை அடிவாரத்திலுள்ள பழனி ஆண்டவர் கோயில், புதிய படிக்கட்டில் உள்ள படிக்கட்டு விநாயகர் கோயில், அங்காள பரமேஸ்வரி குருநாதசுவாமி கோயில், பாம்பலம்மன் கோயில்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்த அறங்காவலர் குழுவினர் தீர்மானம் நிறைவேற்றினர். கும்பாபிஷேக பணிகள் துவங்கும் வகையில் நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை முதல் காலை யாகசாலை பூஜை நடந்தது. இன்று காலை ராஜகோபுரம், கோவர்த்தனாம்பிகை விமானம், வல்லப கணபதி விமானம், காசி விஸ்வநாதர் கோயில் விமானம், பழனி ஆண்டவர் கோயில் விமானம், சொக்கநாதர் கோயில் விமானங்களில் இருந்து சக்தி கலை இறக்கம் செய்யப்பட்டு வரைபடங்களில் கலை ஏற்றம் செய்யப்பட்டது. அந்த வரைபடங்கள் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை முன்பு வைத்து பூஜை செய்யப்பட்டது. நேற்று காலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ராஜகோபுரம், வல்லப கணபதி, கோவர்த்தனாம்பிகை அம்பாளுக்கு யாகசாலை அமைக்கப்பட்டு பூஜை நடந்தது. அதேசமயம் உப கோயில்களிலும் தனித்தனியாக யாகசாலை அமைத்து பூஜையில் நடந்தது. பின்பு யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் மூலம் உற்சவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்திற்கான பணிகளை திருப்பணிகள் நேற்று துவங்கியது. பாலாலயம் பூஜையில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, துணை கமிஷனர் சூரிய நாராயணன், அறங்காவலர் மணிச் செல்வம், தி.மு.க., தெற்கு மாவட்ட துணை செயலாளர் பாலாஜி கலந்து கொண்டனர்.