பதிவு செய்த நாள்
17
பிப்
2025
10:02
குன்னூர்; குன்னூர் அருகே அருவங்காடு ஐயப்பன் கோவிலில் 52வது ஆண்டு திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே அருவங்காடு ஐயப்பன் கோவிலில் கடந்த 12ல், கணபதி ஹோமத்துடன் 52வது ஆண்டு திருவிழா துவங்கியது. தொடர்ந்து, கொடியேற்றம், உச்ச பூஜை, புல்லாங்குழல் இன்னிசை நிகழ்ச்சி நடந்தன. 13ல், கணபதி ஹோமம், கொடிமர பூஜை, அலங்கார பூஜை, லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை, பகவதி சேவை, நடன நிகழ்ச்சிகள் நடந்தன . நேற்று முன்தினம், காலை 9 மணிக்கு கலச பூஜை தீபாராதனை நடந்தது. மாலை 5 மணிக்கு ஹெத்தையம்மன் கோவிலில் இருந்து துவங்கிய ஐயப்பன் திருவீதி உலா, காரக்கொரை, பாலாஜி நகர், கலைமகள், மெயின் கேட் வழியாக, வெடி மருந்து தொழிற்சாலை லைன் மாரியம்மன் கோவிலை அடைந்தது. அங்கிருந்து, சிறுமியர் மற்றும் மகளிரின் தாளப்பொலியுடன் செண்டை மேளம் முழங்க, மெயின் கேட், சுப்ரமணிய சுவாமி கோவில், தொழிற்சாலை குடியிருப்பு வழியாக கோவிலை அடைந்தது. ஐயப்பனுக்கு மகா தீபாராதனை, மகாதீபாராதனை பிரசாத விநியோகம், கொடியிறக்கம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஐயப்ப பஜனை சங்கத்தினர் செய்திருந்தனர்.