மண்ணில் புதைந்த கி.பி. 13ம் நூற்றாண்டு சிவன் கோயில்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19பிப் 2025 03:02
பரமக்குடி; ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கீழப்பார்த்திபனூரில் மண்ணில் புதைந்த கி.பி.13ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவன் கோயில் ஆவணப்படுத்தும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது.
12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் ஏராளமான சிவன் கோயில்கள் கட்டடக்கலை மற்றும் இந்து சமய பண்பாட்டிற்கு சான்றாக உள்ளது. இதன்படி பரமக்குடி அருகே கீழப்பார்த்திபனூரில் கி.பி.13 அல்லது 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படும், பட்டீஸ்வரமுடைய அய்யனார் கோயில் இருக்கிறது. இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் ஒரு கால பூஜை திட்டத்தில் வருகிறது. தொடர்ந்து கோயிலின் கோபுரங்கள் சிதைந்த நிலையில், சுமார் 6 அடி வரை கோயில் சுற்றுப்பகுதி தெரியாத வகையில் மண்ணில் புதைந்துள்ளது. மேலும் கோயிலையொட்டி கண்மாய் கரை உயர்த்தப்பட்டு ரோடு அமைக்கப்பட்டுள்ளது. இதனை புனரமைக்கும் வகையில் 2022ம் ஆண்டு மே மாதம் சீரமைப்பு பணிக்காக ஆய்வு நடத்தப்பட்டது. தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு பின்பு, தற்போது தொல்லியல் துறை சார்பில், புதைந்த கோயிலின் பகுதிகளை ஜே.சி.பி., மூலம் தோண்டி எடுக்கின்றனர். மேலும் ஒவ்வொரு கற்களுக்கும் எண்கள் எழுதப்பட்டு, அவற்றை ஆவணப்படுத்தி, கோயில் உயர்த்தி கட்ட உபயதாரர்கள் மூலம் பணிகள் நடப்பதாக துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதேபோல் கள்ளிக்கோட்டை சிவன் கோயில் உள்ளிட்ட சிதைந்த அனைத்து கோயில்களையும் புனரமைக்க வேண்டும், என ஆன்மிக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.