வேலங்குடி கருப்பர் கோயில் மாசித்திருவிழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மார் 2025 11:03
கண்டவராயன்பட்டி; திருப்புத்தூர் ஒன்றியம் வேலங்குடி சாம்பிராணிவாசகர், உறங்காப்புளி கருப்பர் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு நடந்த இரண்டாம் திருவிழாவில் திரளாக கிராமத்தினர் தங்கள் நேர்த்திக்கடன் வேண்டுதலை நிறைவேற்றினர். இக்கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு நடைபெறும் மாசித் திருவிழா பிப்.23 இரவில் காப்புக் கட்டி துவங்கியது. தொடர்ந்து கப்பரையை முன்னிட்டு அங்காளம்மன் கோயிலிருந்து கருப்பர் கோயிலுக்கு சாமி அழைப்பு நடந்தது. சிவராத்திரியன்று சிறப்பு வழிபாடும், மறுநாள் பாரி வேட்டை கொண்டாட்டமும் நடந்தது. . நேற்று முன்தினம் முதல்நாள் திருவிழாவன்று சாமியாட்டம் நடந்தது. நேற்று காலை முதல் சுற்று வட்டாரக்கிராமத்தினர் கோயில் முன் எழுந்தருளியுள்ள கருப்பரின் புரவிக்கு நீண்ட மாலை, வேட்டி, துண்டு அணிவித்தும், சாம்பிராணி புகைத்தும் வழிபட்டனர். மேலும் தங்கள் நேர்த்திக்கடனாக முடி இறக்குதல், கரும்பு தொட்டில் கட்டுதல்,ஆலய மணி கட்டுதல், அரிவாள் செலுத்துதல்...ஆகியவற்றை நிறைவேற்றினர். அப்பகுதி முழுவதும் பக்தர்களின் அன்னதானம் பல இடங்களில் நடந்தது. தொடர்ந்து இரவில் சாமியாட்டம் நடந்தது. இன்று மூன்றாம் திருவிழாவும், நாளை மஞ்சள்நீராட்டு விழாவும் நடைபெறும்.அன்று கருப்பன்பட்டியில் மஞ்சு அரிவாளில் சாமியாடி பின்னர் கருப்பர் கோயில் வந்து சாமியாட்டத்துடன் விழா நிறைவடையும்.