பதிவு செய்த நாள்
03
மார்
2025
12:03
திருப்பூர்; பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கான ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் சிறப்பு வழிபாடு, திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில் நேற்று நடந்தது. பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் நலன் வேண்டி, திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில், திருப்பூர்,ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. அதன்படி, 11ம் ஆண்டு ஹயக்ரீவர் வழிபாடு, கடந்த வாரம் துவங்கியது; பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கான, 2வது வழிபாடு நேற்று நடந்தது. காலை, 9:00 மணிக்கு, சிறப்பு வேள்வி, காலை, 10:30 மணிக்கு, ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் திருமஞ்சனம், நாம சங்கீர்த்தனம், 11:30 மணிக்கு சாற்றுமறை, மகாதீபாராதனை நடந்தது. யாகவேள்வியில், பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள, மாணவ, மாணவியர் பெயர் மற்றும் நட்சத்திரம் பெயரில், சிறப்பு அர்ச்சனை செய்து, பிரசாதம் வழங்கப்பட்டது. அன்னதானம் நடந்தது. பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுவோருக்கான சிறப்பு வழிபாடு, 9 மற்றும் 16ம் தேதிகளில் நடைபெற உள்ளதாக, திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை தெரிவித்துள்ளது.