திருப்புவனத்தில் மாரியம்மன் கோயில் திருவிழா தொடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மார் 2025 12:03
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா வரும் 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. திருப்புவனம் பகுதி மக்களின் காவல் தெய்வமான முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயிலில் வருடம்தோறும் பங்குனி மாதம் பத்து நாட்கள் வெகு விமரிசையாக திருவிழா நடைபெறும், திருப்புவனத்தில் வசிப்பவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பங்குனி திருவிழா நடைபெறும் பத்து நாளில் ஏதாவது ஒருநாளில் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்வது வழக்கம். இந்தாண்டு திருவிழா வரும் 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினசரி சுற்றுவட்டார கிராமமக்கள் பலரும் அம்மனுக்கு அக்னிசட்டி, ஆயிரம் கண் பானை, கரும்பு தொட்டில் எடுத்து வந்து பொங்கல் வைத்து வழிபடுவார்கள், 28ம் தேதி பொங்கல் திருவிழா நடைபெற உள்ளது. முத்துமாரியம்மன் பங்குனி திருவிழாவை முன்னிட்டு வரும் 12ம் தேதி முகூர்த்த கால் நடும் விழா நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராமமக்களும் பக்தர்களும் செய்து வருகின்றனர்.