பதிவு செய்த நாள்
07
மார்
2025
12:03
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், மாசி பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த 3ம் தேதி காலை 4:30 மணியளவில், கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் நடந்த கிருத்திகை விழாவில், இரவில் பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், சுவாமியுடன் வீதி உலா வந்தனர். அப்போது, மாட வீதிகளில் பல்வேறு குழுவினரால் பிரம்மாண்டமாக வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு தேரில், சுவாமி வீதி உலா நடைபெற்றது. மேலும், மாசி பிரம்மோத்சவ விழாவை முன்னிட்டு, கோவிலின் முன்புறம் முகப்பு அலங்காரத்துடன் ராஜகோபுரம், சரவணபொய்கை குளம், 16 கால் மண்டபம் என, வளாகம் முழுதும் வண்ண மின் விளக்குகள் அமைத்ததால், திருப்போரூர் கந்தசுவாமி கோவில் வளாகம் மற்றும் மாடவீதிகள் ஜொலித்தன.