பதிவு செய்த நாள்
12
மார்
2025
11:03
தொண்டாமுத்தூர்; கோவை ஈஷாவில், தமிழ் தெம்பு திருவிழாவின் நிறைவில், அறுபத்து மூவர் எழுந்தருளல் மற்றும் உலா நடந்தது.
கோவை ஈஷாவில், கடந்த மாதம் 27ம் தேதி முதல் நேற்றுமுன்தினம் வரை, தொடர்ந்து, 12 நாட்கள், தமிழ் தெம்பு தமிழ் மண் திருவிழா நடந்தது. இதன் நிறைவு நாளான நேற்றுமுன்தினம், ஆதியோகி முன்பு, அறுபத்து மூவர் எழுந்தருளல் மற்றும் உலா நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில், ஆதியோகி முன்பு, 63 நாயன்மார்களின் திருவுருவங்களை, சிவனடியார்கள் பல்லக்கில் சுமந்து வந்து, மேடையில் எழுந்தருள செய்யும் நிகழ்ச்சியும், உற்சவமூர்த்தி எழுந்தருளலும் நடந்தது. இதனைத்தொடர்ந்து, தேவாரப்பாடல்களுடன், கைலாய வாத்தியம் முழங்க, ஆதியோகியை சுற்றி, அறுபத்து மூவர் உலாவும், ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் ஆராதனையும் நடந்தது. இதில், ஓதுவாமூர்த்திகள் மற்றும் ஈஷா சமஸ்கிருதி மாணவர்கள் தேவாரப் பாடல்களை பாடினர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சிவனடியார்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு, அறுபத்து மூவர் ஆராதனை பிரசாதம் வழங்கப்பட்டது.