பழநி; பழநி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட கிழக்கு ரத வீதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா பிப்.21ல் முகூர்த்தக்கால் நடுதல் உடன் துவங்கியது. பிப்.,25 ல் கம்பம் நடுதல், மார்ச் 4 ல் கொடியேற்றம், மார்ச் 11 ல் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதை தொடர்ந்து நேற்று மாலை 4:00 மணிக்கு மாரியம்மன் திருத்தேரில் எழுந்தருள 4:30 மணிக்கு பக்தர்களின் ஓம் சக்தி பராசக்தி கோஷத்துடன் தேரோட்டம் நடைபெற்றது. கோயில் யானை கஸ்துாரி தேரின் பின்னால் சென்றது. 6:00 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது. சாரல் மழையிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று இரவு 10:00 மணிக்கு கொடியிறக்குதலுடன் திருவிழா நிறைவடைகிறது.