பதிவு செய்த நாள்
20
மார்
2025
04:03
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் அருகே பழமையான கோவிலில், 16ம் நுாற்றாண்டு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோழர்கால சிவலோகநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் நடந்துவரும் நிலையில், சிதைந்த நிலையில் பழமையான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து, பேரூராட்சி தலைவர் ஜெயமூர்த்தி தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்திக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், நாராயணமூர்த்தி தலைமையில் பேராசிரியர் வேல்முருகன், ஆய்வு மாணவர் பிரபு, நவநீதகிருஷ்ணன் ஆகியோர் கல்வெட்டை ஆய்வு செய்தனர். இதுபற்றி அவர்கள் கூறுகையில், கி.பி.16ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசர் கிருஷ்ணதேவ மகாராயரின் 8 ம் ஆட்சி ஆண்டில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்டுள்ள குறிப்புகளை வைத்து பார்க்கும்போது, ஆங்கில ஆண்டு 1517 ல் பிப்ரவரி மாதம் பொறிக்கப்பட்டுள்ளது.
அதில், சந்திர நயினார் என்பவர், கோவிலில் உள்ள செங்கழுநீர் செல்லப் பிள்ளையாருக்கு நாள் படையலுக்காக இவ்வூரில் உள்ள 500 குழி நிலத்தை அவிப்புறமாக வழங்கியது தெரிகிறது. அவிப்புறம் என்பது இறைவனுக்கு தினந்தோறும் நைவேத்யம் எனும் நாள்படையலுக்கு ஆகும் செலவை ஈடு செய்ய விடப்பட்ட நிலக் கொடையாகும். சோழர்களின் ஆட்சி முடிவுற்று 2 நுாற்றாண்டுகள் கடந்த நிலையில் பொறிக்கப்பட்ட இக்கல்வெட்டின் மூலம் விஜயநகர நாயக்கர் ஆட்சியிலும் கூட சோழர்கால நாட்டு பிரிவுகள் தொடர்ந்திருப்பதை அறிய முடிகிறது. இதனால் மறைந்து போன சோழர் ஆட்சி முறையில் சிறப்பையும் உணர்த்துவதாக கூறினர்.