பதிவு செய்த நாள்
09
ஏப்
2025
01:04
ராசிபுரம்; ராசிபுரம் அருகே, பச்சை தண்ணீர் மாரியம்மன் கோவில் திருவிழாவில், தண்ணீரில் விளக்கேற்றி அதிசய வழிபாடு செய்தனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த தட்டாங்குட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற பச்சை தண்ணீர் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவிழா நடப்பது வழக்கம். பல ஆண்டுகளுக்கு முன், கோவில் பூசாரி அம்மனுக்கு விளக்கேற்றி வழிபாடு நடத்த ஊர் தர்மகர்த்தாவிடம் எண்ணெய் கேட்டுள்ளார். அப்போது அவர், ‘சாமி உண்மை என்றால் விளக்கில் தண்ணீர் ஊற்றி பற்ற வையுங்கள்’ என கூறியுள்ளார். உடனே, பூசாரி குளித்துவிட்டு அதிகாலையில் கோவில் சன்னதியில் அகல் விளக்கில் பச்சை தண்ணீரை ஊற்றி, விளக்கை பற்ற வைத்துள்ளார். அதிசயமாக, தண்ணீரில் விளக்கு கொழுந்துவிட்டு எரிந்தது. இந்த நிகழ்வால், இக்கோவில், ‘பச்சை தண்ணீர் மாரியம்மன் கோவில்’ என, அழைக்கப்படுகிறது. இந்தாண்டு பொங்கல் விழா, கடந்த வாரம் தொடங்கியது. நேற்று அதிகாலை மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. தொடர்ந்து, விளக்கில் தண்ணீரை ஊற்றி பூசாரி விளக்கை பற்ற வைத்தார். எண்ணெயில் எரிவது போல், விளக்கு பிரகாசமாக எரிந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.