பதிவு செய்த நாள்
09
ஏப்
2025
01:04
மேட்டுப்பாளையம்; குண்டத்து காளியா தேவி கோவிலில் நடந்த, குண்டம் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள், குண்டம் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர்.
மேட்டுப்பாளையம் அடுத்த ஓடந்துறை ஊராட்சிக்கு உட்பட்ட ஊமப்பாளையத்தில், குண்டத்து காளியாதேவி கோவில் உள்ளது. கோவிலின், 37ம் ஆண்டு குண்டம் திருவிழா, கடந்த மாதம், 25ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. ஏப்ரல் 1ம் தேதி ஆடு குண்டம் திறக்கப்பட்டது. ஏழாம் தேதி அம்மன் அழைப்பும், 8ம் தேதி ஊமப்பாளையம் விநாயகர் கோவிலில் இருந்து, சக்தி கரகங்களும், அக்னி சட்டியும் அழைத்து வந்தனர். இன்று காலை, 6:00 மணிக்கு பவானி ஆற்றில் இருந்து அம்மன் சுவாமியை கோவிலுக்கு அழைத்து வந்தனர். அப்போது பக்தர்கள் அலகு குத்தி உடன் வந்தனர். கோவில் தலைமை பூசாரி பழனிசாமி குண்டத்துக்கு பூஜை செய்து, பூ பந்தை உருட்டி விட்டு, முதலில் குண்டம் இறங்கினார். அதைத் தொடர்ந்து பூஜை தட்டுடன் அருள்வாக்கு பூசாரி காளியம்மாள், சக்தி கரகம், அக்னி சட்டி, அலகு குத்திய பக்தர்கள் குண்டம் இறங்கினர். அதை தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருந்த ஆண், பெண் பக்தர்கள், சிறுவர்கள் என ஏராளமானவர்கள், குண்டம் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அம்மன் சுவாமிக்கும், மகா முனிஸ்வரருக்கும் அக்னி அபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு அலங்கார பூஜை நடந்தது. விழாவில் மஞ்சள் நீராட்டும், பாலப்பட்டி கோவிலில் இருந்து மாவிளக்கு எடுத்து வந்து, அம்மனுக்கு படைத்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நாளை, 108 இளநீர் அபிஷேகம், மறுபூஜை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.