பதிவு செய்த நாள்
12
ஏப்
2025
05:04
நாமக்கல்; நாமக்கல் நரசிம்மர் கோவில் பங்குனி தேர் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து பக்தி பரவசமடைந்தனர். ஒரே கல்லில் உருவான நாமக்கல் மலையின் மேற்குபுறத்தில், நாமகிரி தாயார் உடனுறை நரசிம்ம சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு லட்சுமி நரசிம்மர், மூலவர் மலையை குடைந்து குடைவறை கோவிலாக உருவாக்கப்பட்டுள்ளது. இக்கோவிலுக்கு நேர் எதிர்புறம் ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சுவாமி சாந்த சொரூபியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மலையின் கிழக்கே அரங்கநாயகி தாயார் உடனுறை அரங்கநாதர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ‘கார்க்கோடகன்’ என்ற பாம்பின் மீது ரெங்கநாதர் அனந்த சயன நிலையில், மலையை குடைந்து குடைவறை கோவிலாக அமைக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும், பங்குனி மாதத்தில், இந்த மூன்று தெய்வங்களுக்கும், ஒரே நாளில் தேர் திருவிழா நடத்தப்படுகிறது. அதன்படி, இந்தாண்டு விழா, கடந்த, 4ல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று கோட்டையில் உள்ள நரசிம்ம சுவாமி தேரோட்டம், நேற்று காலை, 9:00 மணிக்கு கோலாகலமாக நடந்தது. முன்னதாக, தேர் சக்கரங்களுக்கு பட்டாச்சாரியார்கள் சிறப்பு பூஜை செய்தனர். நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன், மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, கமிஷனர் மகேஸ்வரி, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் இளையராஜா, முக்கிய பிரமுகர்கள், தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் தேர்வடம் பிடித்து இழுத்தனர். மாலை, 4:00 மணிக்கு, நாமக்கல் மெயின் சாலையில் உள்ள அரங்கநாயகி தாயார் உடனுறை அரங்கநாதர் தேரோட்டம், ஆஞ்சநேயர் சுவாமி சப்பரம் நடக்கிறது. தேரோட்ட விழாவையொட்டி, நாமக்கல் நகருக்குள் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.