பதிவு செய்த நாள்
15
மே
2025
10:05
தேனி; வீரபாண்டி கவுமாரியம்மன் சித்திரை திருவிழா நேற்று காலை மஞ்சள் நீராட்டத்துடன் அம்மன் உற்ஸவம் ஊர்க்கோயிலுக்கு அழைத்துச் செல்லும் நிகழ்வுடன் நிறைவு பெற்றது.
இக்கோயிலில் சித்திரை திருவிழா மே 6ல் துவங்கி, 7, 8 ஆகிய இரு நாட்களில் அம்மன் உற்ஸவம் முத்துப்பல்லக்கு, புஷ்பப்பல்லக்கு வீதி உலா நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 9ல் நடந்தது. இந்த ஆண்டு திருவிழாவில் அதிகளவில் அக்னிசட்டி, அங்கபிரதட்சணம், ஆயிரம் கண் பானை, அலகு குத்துதல் என பக்தர்கள் நேர்த்திகடன்களை நிறைவேற்றினர். நேற்று காலை திருவிழாவின் நிறைவு நிகழ்வான அம்மன் கோயிலில் இருந்து வீரபாண்டி ஊர்க்கோயிலுக்கு அழைத்து செல்லப்பட்டது. வழி நெடுகிலும் மஞ்சள் நீராட்டம் நடந்தது. பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. ஊர்க்கோயிலை உற்ஸவ அம்மன் அடைந்ததும், மண்டகப்படி, சிறப்பு பூஜைகள் நடந்தன. நிகழ்வில் கோயில் செயல் அலுவலர் நாராயணி, மேலாளர் பாலசுப்பிரமணி கோயில் பணியாளர்கள் பங்கேற்றனர்.